சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
6.071
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் பண் - திருத்தாண்டகம் (பொது -அடைவுத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=6DIhALQKGjY Audio: https://www.youtube.com/watch?v=_h7Ni6-aIaw |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.071  
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -அடைவுத் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம் மூன்று எய்து, புலந்து அழிய, சலந்தரனைப் பிளந்தான், பொன் சக்- கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல் சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழு நனிபள்ளி, தவப்பள்ளி, சீர் ஆர் பரப்பள்ளி, என்று என்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆகப் பாலிப்பாரே. | [1] |
காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம், கடவூர் வீரட்டானம், காமரு சீர் அதிகை மேவிய வீரட்டானம், வழுவை வீரட்டம், வியன் பறியல் வீரட்டம், விடை ஊர்திக்கு இடம் ஆம் கோவல் நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், கோத்திட்டைக் குடிவீரட்டானம், இவை கூறி நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால், நமன் தமரும், சிவன்தமர்! என்று அகல்வர், நன்கே. | [2] |
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி, நல்லக்குடி, நளி நாட்டியத்தான் குடி, கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, காணுங்கால் விற்குடி, வேள்விக்குடி, நல் வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடியும், போற்ற இடர் போகும் அன்றே. | [3] |
பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர், பெரும்பற்றப் புலியூரும், பேராவூரும், நறையூரும், நல்லூரும், நல்லாற்றூரும், நாலூரும், சேறூரும், நாரையூரும், உறையூரும், ஓத்தூரும், ஊற்றத்தூரும், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூரும், துறையூரும், துவையூரும், தோழூர்தானும், துடையூரும், தொழ இடர்கள் தொடரா அன்றே. | [4] |
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே. | [5] |
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு; தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு; பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க, விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே. | [6] |
கடு வாயர் தமை நீக்கி என்னை ஆட்கொள் கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல் வாயில், நெடுவாயில், நிறை வயல் சூழ் நெய்தல் வாயில், நிகழ் முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில், மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில், மறிகடல் சூழ் புனவாயில், மாடம் நீடு குடவாயில், குணவாயில், ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே. | [7] |
நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல் ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே. | [8] |
கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா, மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம் விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம், இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே. | [9] |
நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும், தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம், விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா; கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே. | [10] |
கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன் பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில் குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறையும், குரங்காடு துறையினோடு, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே. | [11] |